Thursday, June 25, 2009

Saturday, June 13, 2009

Varambiyam Nallan Chakravarthi clan

ஓம் நமோ நாராயணாய
வரம்பியம் நல்லான் சக்கரவர்த்தி பரம்பரை
வரம்பியம் கிராமத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ கோபாலாசார்யார் என்ற ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர் வாழ்ந்தார். அவர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி வம்சத்தில் தோன்றியவர். அவரது வழித்தோன்றலில் ஒருவனாகிய அடியேன் ரங்காச்சாரி, எனது வம்சத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பி இந்த கட்டுரையைத் துவங்குகிறேன்.
நல்லான் சக்கரவர்த்தி பரம்பரையின் துவக்கம்
சுமார் எழுநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் ராஜ்யத்திலுள்ள மேல் கோட் என்ற சிற்றூரில் ஸ்ரீ வத்ஸ கோத்ரத்தில் உதித்த திருமலை சக்கரவர்த்தி ஐயங்கார் என்ற ஸ்ரீ வைஷ்ணவப் பெரியவர் வாழ்ந்து வந்தார். மேல் கோட் ஸ்ரீ செல்வ நாராயணப் பெருமாள் கோயிலுக்கு தீர்த்தக் கைங்கர்யம் செய்து வந்த சக்கரவர்த்தி ஐயங்கார் விசால மனம் படைத்தவராக இருந்தார்.
ஒருநாள் அதிகாலையில் கோயிலுக்குச் செல்லும் முன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மிதந்து வந்த சடலம் ஒன்று சக்கரவர்த்தி ஐயங்கார் தலையில் முட்ட, அந்த சவத்தின் உடலில் சங்கு சக்ர சின்னங்கள் இருந்தபடியால் அந்த சடலத்துக்கு இறுதிக் கடன்களை ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி செய்தபின் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய கோயிலுக்குப் புறப்பட்டார். உள்ளூரிலிருந்த பெரியோர்கள் சக்ரவர்த்தி ஐயங்கார் ஓர் அனாதைப் பிணத்துக்கு இறுதிக்கடன்களை செய்ததைக் கண்டு கோபித்து அவரை இனியும் பெருமாள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடை செய்தனர். மனம் வருந்திய சக்கரவர்த்தி ஐயங்கார் பெருமாளை நோக்கி தான் செய்தது தவறல்லவே என்று பிரார்த்திக்க அன்று உச்சிகால பூஜையில் கோயில் அர்ச்சகர்மேல் பெருமாள் ஆவேசமாகி "இவன் ஊருக்குப் பொல்லான் - எமக்கு நல்லான்" என்று சாதித்தார். தொடர்ந்து தீர்த்தக் கைங்கர்யம் செய்யவும் பணித்தார். அன்று முதல் சக்கரவர்த்தி ஐயங்கார் "நல்லான் சக்கரவர்த்தி" என்று அழைக்கப்பட்டார்.

மேற்படி சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கையில் அவர் குருவாகிய ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பியின் கட்டளையை மீறி, தான் ஒருவர் நரகம் புகினும் உலகோர் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைத்து மக்களுக்கும் கோபுர உச்சியிலிருந்து உபதேசித்தது போன்றது. எழுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய முற்போக்கு சிந்தனையும் செயலும் இருந்தது பெருமைக்குரியது.